புதுடெல்லி:-
வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நிவர் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த புயலானது, தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 420 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி அதற்கடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுவடையும்.
நிவர் புயலை எதிர்கொள்வது பற்றி தேசிய பேரிடர் மீட்பு குழுவின் இயக்குனர் ஜெனரல் கூறும்பொழுது, தமிழகத்தில் 12 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று, புதுச்சேரியில் 2 குழுக்கள், காரைக்காலில் 1 குழு தயாராக உள்ளன.
நெல்லூரில் 3 குழுக்கள், சித்தூரில் 1 குழு மற்றும் விசாகப்பட்டினத்தில் 3 குழுக்கள் என ஆந்திர பிரதேசத்தில் 7 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
இதன்படி 22 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையிலும், 8 குழுக்கள் காத்திருப்பிலும் உள்ளன என கூறியுள்ளார். இதனால், நிவர் புயலை எதிர்கொள்ள மொத்தம் 30 குழுக்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.