ஹைதராபாத்:-
150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஹைதராபாத் மாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர் பதவியை கைப்பற்றும் நோக்கத்தோடு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாரூதின் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைவதையடுத்து ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக பாஜக சார்பில் கட்சியின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் முதல் பல்வேறு மாநில முதல்மந்திரிகளும் ஹைதராபாத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று உத்தரபிரதேச மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதனால், ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் கிட்டத்தட்ட பாராளுமன்ற தேர்தலை போல பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில், எஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாரூதின் ஓவைசி பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
இது ஹைதராபாத் தேர்தல் போன்று இல்லை. நாம் ஏதே பிரதமர் நரேந்திரமோடிக்கு பதிலாக பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் போல உள்ளது.
கர்வானில் நான் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அனைவரும் இங்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினேன். அப்போது அவர்கள் டிரம்பையும் இங்கு அழைக்கவேண்டும் என ஒரு சிறுவன் கூறினான். அவன் கூறியது சரிதான். டிரம்ப் மட்டும் தான் இன்னும் வரவில்லை என்றார்.