பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த நான்கு தினங்களாக மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக பழனி காளிபட்டி, கணக்கன்பட்டி , மஞ்சநாயக்கன்பட்டி, கோம்பைபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. காளிப்பட்டி கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்குளம் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. செங்குளத்தில் தேங்கியுள்ள மழை நீரால் காளிபட்டி, பொருளுர், மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய கிணறுகள், போர்வல்களில் தண்ணீர் கிடைத்துள்ளது. மேலும் மூன்றாண்டுகளுக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிசயம் நடந்தது போல பல வருடங்களுக்கு பிறகு குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளதை பார்ப்பதற்காக குழந்தைகளும், பெரியவர்களும் ஆர்வம்காட்டிவருகின்றனர்.