டெல்லியில் விவசாயிகளின் பேரணி வன்முறையை முன்னிட்டு இன்டர்நெட் சேவை தற்காலிக முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் விவசாயிகளின் பேரணி வன்முறையை முன்னிட்டு இன்டர்நெட் சேவை தற்காலிக முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
டெல்லி:-
டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர். ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும், டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை தடுக்க முயன்றனர்.
ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.
இதனைத்தொடர்ந்து போலீசார் விவசாயிகள் மற்றும் அவர்களின் டிராக்டர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதிலும் போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர்.
அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். மேலும் விவசாயிகள் ஆயுதங்களை சுழற்றியும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர்.
தற்போது செங்கோட்டையை சுற்றி விவசாயிகள் திரண்டிருப்பதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். செங்கோட்டையை சுற்றிலும் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளார். போலீசார் சுட்டதால் ஒரு விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளன. போலீசார் துப்பாக்கி சூட்டில்தான் உயிரிழந்ததாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
எனினும், விவசாயிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு, டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்து உள்ளனர். விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னிட்டு டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் சில இடங்களில் இன்டர்நெட் சேவை முடங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து, மத்திய உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிங்கு, காஜிப்பூர், திக்ரி, முகர்பா சவுக், நங்க்லோய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு 11.59 மணிவரை இன்டர்நெட் சேவை தற்காலிக முடக்கம் செய்யப்படுகிறது என தெரிவித்து உள்ளது.