மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ.80 கோடி செலவில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்ட நினைவிடம் நேற்று மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா இல்லமும் திறக்கப்பட்டது. வேதா இல்லத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருப்பதால், மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் லேடி வெலிங்டன் கல்லூரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலையை திறந்துவைத்தார்.
மேலும் தற்போது திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்
துணை முதல்வர் ஓபிஎஸ் , அமைச்சர்கள் கேபி அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஜெயலலிதாவின் 9 அடி உயர முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட்டது. மேலும், லேடி வெலிங்டன் கல்லூரியில் பெயர் மாற்றப்பட்ட ஜெயலலிதா வளாகமும் திறக்கப்பட்டது.
ஜெயலலிதா சிலை திறப்பில் நடிகர் அஜித் உதவியுடன் வடிவமைத்த ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டது. ஜெயலலிதா சிலை மீது போர்த்தப்பட்டிருந்த பச்சை நிற போர்வையை ட்ரோன் மூலம் முதல்வர் அகற்றிய நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் ட்ரோன் மூலம் சிலை மீது மலர் தூவப்பட்டது.