ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சக ஊழியர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதாக குற்றம்சாட்டிய பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன். மேலும், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சக ஊழியர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதாக குற்றம்சாட்டிய பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன். மேலும், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
கான்பெர்ரா:-
ஆஸ்திரேலியாவில் முன்னாள் அரசியல் ஆலோசகரான பிரிட்டானி ஹிக்கின்ஸ் (26) , சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி, ஆஸ்திரேலியா முழுவதும் கடும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சக ஊழியர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதாக பிரிட்டானி கூறினார். மேலும், நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு தனது வேலை பறிபோகும் என்று அஞ்சியதாகவும், அதேசமயம் இதுதொடர்பாக தனது மேலதிகாரிகளிடம் இருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கோரியுள்ளார்.
பெண் அதிகாரியின் இந்த குற்றச்சாட்டுகளை கேட்டு தான் "நொறுங்கிவிட்டதாகவும்" ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பணிப்பாதுகாப்பு மற்றும் கலாசாரத்தை ஆய்வுக்குட்படுத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
"இந்த சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்கவே கூடாது. நாடாளுமன்றத்தில் பணிபுரியும் எந்தவொரு இளம் பெண்ணும் பாதுகாப்பாக இருப்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
நடந்தது என்ன?
கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள், இரவுநேரத்தில்நான் வெளியே சென்றுவிட்டு, வீடு திரும்பும்போது நாடாளுமன்றத்தில் உடன் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் என்னை காரில் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறினார். ஆனால், மாறாக அவர் காரை நாடாளுமன்றத்துக்கு ஓட்டிச் சென்றார்" என்று பேட்டியொன்றில் பிரிட்டானி தெரிவித்துள்ளார்.
அப்போது தான் மதுபோதையில் இருந்ததாகவும், ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் அலுவலகத்தில் தூங்கியதாகவும் கூறிய அவர், தான் கண்விழித்தபோது, அந்த மூத்த அதிகாரி பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதை பார்த்ததாகவும் கூறினார்.
"நான் உடனே அழத்தொடங்கிவிட்டேன்… உடனே நிறுத்துங்கள் என்று அவரிடம் கூறினேன்" என்று நெட்ஒர்க் டென் தொலைக்காட்சியிடம் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்தை விட்டு அந்த மூத்த அதிகாரி சென்றுவிட்டதாகவும், ஆனால் நாடாளுமன்றத்தை விட்டு தான் வெளியே சென்றபோது அங்கிருந்த காவலாளிகள் யாரும் தனக்கு உதவவில்லை என்றும் பிரிட்டானி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு அடுத்த சில நாட்களில், இதை அமைச்சரின் அலுவலகம் "சமாளிக்க" முற்படுவதை கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறினார்.
இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தால் தான் ஆதரவு கொடுப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் இது தனது பணிவாழ்க்கைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும் என்று கருதியதால் தவிர்த்துவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்த மூத்த அதிகாரி அமைச்சரின் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டகாக பிரிட்டானி தனது தொலைக்காட்சி பேட்டியின்போது கூறினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்தும் மோரிசன் அமைச்சரவையில் உள்ள மற்றொரு அமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றிய இவர், பிறகு அந்த துறையிலிருந்தே விலகிவிட்டார்.
ஒரு நாட்டின் நாடாளுமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற இந்த சம்பவம் பெண்களின் பணிப்பாதுகாப்பு குறித்த விவாதத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.